மேலும், அழகர்கோவில் காப்புக் காடுகள் அழிவது மட்டுமின்றி நூற்றுக்கணக்கான நீர்நிலைகளும் தடம் தெரியாமல் போகும் நிலை ஏற்படும் அச்சம் உருவானது. வாழ்வாதாரம் மட்டுமின்றி, வாழ்விடமே அழியும் சூழலால் இப்பகுதி மக்கள் டங்ஸ்டன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை தொடர்ந்தனர். இந்நிலையில், கடந்த டிச.9ம் தேதி நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் உடனடியாக ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து ஒன்றிய அரசிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து டிச.24ல் அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒருபோதும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்றும் தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்த நிலையில், திட்டத்தை கைவிட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
அதற்காக பேச்சுவார்த்தை நடத்த, மேலூர், அரிட்டாப்பட்டி கிடாரிப்பட்டி உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களான மகாமுனி அம்பலம், ஆனந்த், போஸ், முருகேசன், முத்துவீரணன், சாமிக்கண்ணு, ஆனந்த் ஆகியோரை பாஜ மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன், மதுரை மாவட்டத் தலைவர் மகாசுசீந்திரன், புறநகர் மாவட்டத்தலைவர் ராஜசிம்மன் ஆகியோர் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் டெல்லியில் ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசவுள்ளனர். இவர்களை சந்தித்து பேசிய பின்னர், அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்வது தொடர்பான அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிடலாம் எனக்கூறப்படுகிறது.
The post தமிழ்நாடு அரசின் நெருக்கடிக்கு பணிந்தது ஒன்றிய அரசு: அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய முடிவு? appeared first on Dinakaran.
