பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு இடஒதுக்கீடு உச்சநீதிமன்றம் விரைவில் இறுதி உத்தரவு: அவசர வழக்காக விசாரிக்கிறது

புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதால், விரைவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரியவருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் 10 சதவீதம் வழங்கியதை அமல்படுத்துவது தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை கடந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி அறிவிப்பானை வெளியிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத கூடுதல் இடஒதுக்கீடு, மற்றும் ரூ.8 லட்சம் வருமான அளவுகோல் நிர்ணயம் செய்துள்ளது தொடர்பாக நான்கு வாரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என கடந்த நவம்பர் 25ம் தேதி ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கான குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என்பதில் நடப்பு கல்வி ஆண்டில் எந்த மாற்றமும் கிடையாது. புதிய மாற்றங்களை கொண்டு வரும் பட்சத்தில், அதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டால் மருத்துவ கலந்தாய்வு நடத்துவது மேலும் காலதாமதமாகும்’ என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொசிலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று ஒரு கோரிக்கை வைத்தார். அதில்,‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அவசரமாக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும்’ என்றார்.ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதி சந்திரசூட், ‘இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க கூடியது என்பதால், அவசர வழக்காக விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து விட்டு ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும். இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு தற்போது தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்திற்கு பதில் மனு தாக்கல் செய்ய எதிர்மனுதாரர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது’ என உத்தரவிட்டார். இதையடுத்து 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்த ஓரிரு தினத்தில் இறுதி உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு இடஒதுக்கீடு உச்சநீதிமன்றம் விரைவில் இறுதி உத்தரவு: அவசர வழக்காக விசாரிக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: