பெரம்பூர்: வடசென்னை வளர்ச்சி பணிகள் அடுத்தாண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது அவர், பெரம்பூர் ஜமாலியா மற்றும் ராஜா தோட்டம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளையும் புதிதாக கட்டப்பட்டுவரும் கொளத்தூர் நவீன சந்தை மற்றும் திருவிக. நகர் பேருந்து நிலையத்தையும் ஆய்வு செய்தார்.
இதன்பிறகு அமைச்சர் பி.கே.சேகர் பாபு அளித்த பேட்டி; ஜமாலியா பகுதியில் கட்டப்பட்டுவரும் குடியிருப்புகள் தை மாதம் குடியிருப்பு தாரர்களுக்கு ஒப்படைக்கும் அளவிற்கு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் தினமும் பணிகள் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. துரிதமான பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு பணிகளை வேகப்படுத்தி வருகின்றனர். 2025 டிசம்பர் மாதத்திற்குள் திட்டமிடப்பட்ட 200 பணிகளையாவது முடிப்போம் என்ற சூழலில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடசென்னை வளர்ச்சி திட்டம் ஆரம்பத்தில் 4,014 கோடி என்ற ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இன்று 6 ஆயிரம் கோடியை தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. வரும் 30ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைக்க இருக்கிறார். முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கவும் உள்ளார்.இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்த பேட்டியின்போது, வீட்டு வசதி வாரிய செயலாளர் காகர்லா உஷா உள்பட பலர் இருந்தனர்.
The post வட சென்னை வளர்ச்சிப் பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி appeared first on Dinakaran.
