ஒப்பந்த நிறுவனத்தில் ஊதிய பிரச்னை; சென்னை – பெங்களூரு விரைவு சாலை பணியை முடிப்பதில் சிக்கல்; வாகன ஓட்டிகள் கடும் அவதி

சென்னை: சென்னையில் இருந்து பெங்களூரு வரை, தங்க நாற்கர சாலை உள்ளது. இந்த சாலை வழியாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல, 7 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். இதனால் பயண நேரத்தைக் குறைக்கும் வகையில், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, சுங்குவார்சத்திரம், கோவிந்தவாடி, பாணாவரம், ராணிப்பேட்டை வழியாக பெங்களூரு செல்வதற்கு அதிவிரைவு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை அமைக்கப்பட்டால் சென்னையில் இருந்து 4 மணி நேரத்தில், பெங்களுரு சென்றடையலாம். இதனால் விரைவாக செல்ல நினைக்கும் பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.

சாலை பணிக்கு, நிலம் கையகப்படுத்துவதற்கு 2012ம் ஆண்டு சிவன்கூடல், மொளச்சூர், சிறுவாக்கம், கோவிந்தவாடி, நெமிலி, பாணாவரம் ஆகிய கிராமவாசிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் கோவிந்தவாடி – மணியாட்சி இடையே, அதிவிரைவு சாலை போடும் பணிக்கு இணைப்பு ஏற்படுத்தாமல் உள்ள தரைப்பாலம், சிறுவாக்கம் பகுதியில் அதிவிரைவு சாலை போடும் பணிக்கு உயர் மட்ட தரைப்பாலங்கள் இணைப்பு ஏற்படுத்தப்படாமல் உள்ளத்தால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த கட்டமாக, 2016ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நிலங்களை கையகப்படுத்தினர். அதிவிரைவு சாலை விரிவாக்கப் பணிக்கு ரூ.7,406 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் ரூ.3,477 கோடி கட்டுமானப் பணிக்கும், ரூ.3,929 கோடி நிலங்களை கையகப்படுத்தவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிதி ஒதுக்கியுள்ளது.

அதிவிரைவு சாலைக்கு, புதிய சாலை போடுவதற்கு 2022ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் மண் மாதிரிகளை சேகரிக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் செய்தனர்.முதற்கட்டமாக, கூத்திரபாக்கம் ஏரி மேல்பொடவூர், மணியாட்சி, கோவிந்தவாடி ஏரி ஆகிய இடங்களில் உயர்மட்ட தரைப்பாலம் கட்டும் பணி நடந்து வருகின்றன. இதையடுத்து, உயர்மட்ட பாலங்கள் மற்றும் அந்த உயரத்திற்கு ஏற்ப, மண் சாலை போடும் பணியை, அந்தந்த சாலை போடும் ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர்.

சித்துார் – ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை – காஞ்சிபுரம், காஞ்சிபுரம் – திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வரையில் 105 கி.மீ. தூரம் சாலை போடும் பணி நடந்து வருகிறது. இதில், எரிகளில் சாலை போடும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டும், ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், மகேந்திரவாடி, உளியநல்லுார் ஆகிய கிராமங்களில் பில்லர் போடும் பணி அரைகுறையாகவும் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி, சிறுவாக்கம் ஆகிய பகுதிகளில் பாலங்கள் இணைப்பு ஏற்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் முடிக்க வேண்டிய சாலைப்பணி கள், நிதி நெருக்கடியால் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் திணறி வருகிறது.

ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. ஒரு பக்கம் இதுபோன்ற கருத்துகள் இருந்தாலும், மறு பக்கம் பருவமழை முன்கூட்டியே பெய்ததால் ஏரிகளில் நீர் வரத்து ஏற்பட்டு லாரிகளை இயக்க முடியவில்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது. இந்த பணியில் கட்டுமானத் தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர்கள், நிர்வாக ஊழியர்கள் என 300 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு காலை, மதியம், இரவு நேரங்களில் உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது உணவு வழங்குவதையும் ஒப்பந்த நிறுவனம் குறைத்து விட்டது.

ஊதியமும் கிடைக்கவில்லை, சாப்பாட்டுக்கும் வழியில்லை என்ற நிலை ஏற்பட்டதால், கட்டுமானத் தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர்கள் என 100 பேர் தங்களின் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
பருவ மழை பாதிப்பு மற்றும் ஊழியர் பற்றாக்குறையால், சென்னை பெங்களூரு இடையே, அதிவிரைவு சாலை போடும் பணி முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். விரைவில் இந்த பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஒப்பந்த நிறுவனத்தில் ஊதிய பிரச்னை; சென்னை – பெங்களூரு விரைவு சாலை பணியை முடிப்பதில் சிக்கல்; வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: