மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர போலி சான்றிதழுடன் வந்த வட மாநில மாணவர் கைது: நீட்டில் 720க்கு வெறும் 60 மார்க் எடுத்தவர்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இயங்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர, போலி சான்றிதழுடன் வந்த வடமாநில மாணவரை போலீசார் கைது செய்தனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி, தற்போது ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இங்கு இந்தாண்டுக்குரிய மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பிறந்து அரியானாவில் பள்ளிப் படிப்பை முடித்த அபிஷேக் (22) என்ற மாணவர் தனது தந்தையுடன் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர கடந்த 25ம் தேதி ராமநாதபுரம் வந்துள்ளார். அப்போது அவர் காட்டிய சான்றிதழ்களை பார்த்த எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் சந்தேகமடைந்தனர். இதுகுறித்து கேணிக்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வந்த போலீசார் அபிஷேக்கை தனியாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில், ஏற்கனவே நடந்த நீட் தேர்வில் 2 முறை தோல்வி அடைந்ததாகவும், இந்தாண்டு 720 மதிப்பெண்ணிற்கு வெறும் 60 மார்க் எடுத்ததாகவும், மருத்துவப் படிப்பில் சேரும் ஆசையில், பெற்றோருக்கு தெரியாமல் மதிப்பெண் சான்றிதழை தானாக போலியாக தயார் செய்து சேர வந்ததாகவும் ஒப்பு கொண்டார். அவரது செல்போன் மற்றும் இ-மெயில் ஆகியவற்றை ஆய்வு செய்து உறுதி செய்த போலீசார் அபிஷேக் மீது வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

The post மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர போலி சான்றிதழுடன் வந்த வட மாநில மாணவர் கைது: நீட்டில் 720க்கு வெறும் 60 மார்க் எடுத்தவர் appeared first on Dinakaran.

Related Stories: