முழங்காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலாது : சிபிசிஐடிக்கு பா.ஜ.க. எம்.பி. செல்வகணபதி கடிதம்

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு புதுவை பா.ஜ.க. எம்.பி. செல்வகணபதி இன்று ஆஜராகவில்லை. கடந்த மக்களவை தேர்தலின் போது மார்ச் 26ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு சென்ற ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேலாளர் உள்பட 3 பேர், பிடிபட்ட ரூ.4 கோடி நெல்லை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்குமூலம் அளித்தனர்.

இதை தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேலாளர் சதீஷ், பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பாஜ மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உள்பட 15 பேரிடம் தனித்தனியாக வாக்குமூலம் பெற்றனர். இந்த வழக்கில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் ஈரோடு பகுதியை சேர்ந்த ரயில்வே கேன்டீன் உரிமையாளர் முஸ்தபா என்பவர் ரூ.4 கோடி தன்னுடையது என்று உரிமை கோரினார். ஆனால் விசாரணையின் போது, முக்கிய அரசியல் பிரமுகரின் அழுத்தம் காரணமாக முஸ்தபா தனது பணம் என்று உரிமை கோரியதும், தனக்கு அழுத்தம் கொடுத்த நபர்கள் குறித்து சிபிசிஐடி போலீசாரிடம் முஸ்தபா தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக பாஜ மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகத்திடம் கடந்த 7ம் தேதி 6 மணி நேரம் விசாரித்தனர். அதில் கேசவ விநாயகம் அளித்த தகவலின்படி, ரூ.4 கோடி தொடர்பாக விசாரணை நடத்தும் வகையில் சிபிசிஐடி போலீசார், புதுச்சேரி மாநில தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதி வரும் 25ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். அதேபோல் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் லால்வானி மற்றும் என்எஸ்சி போஸ் சாலையை சேர்ந்த சூரஜ் ஆகியோருக்கும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு புதுவை பா.ஜ.க. எம்.பி. செல்வகணபதி இன்று ஆஜராகவில்லை. மாறாக சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக புதுச்சேரி பா.ஜ.க. எம்.பி. செல்வகணபதி 3 மாதம் அவகாசம் கேட்டு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலாது. விசாரணைக்கு ஆஜராக மூன்று மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து தேவைப்படும் பட்சத்தில் நேராக புதுச்சேரிக்கே சென்று செல்வகணபதியிடம் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post முழங்காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலாது : சிபிசிஐடிக்கு பா.ஜ.க. எம்.பி. செல்வகணபதி கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: