3% அகவிலைப்படி அறிவிப்பு முதல்வரை சந்தித்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்

சென்னை: ஒன்றிய அரசு அறிவித்த 3 சதவீத அகவிலைப்படியை ஊதியத்துடன் வழங்க அரசாணை பிறப்பித்த தமிழக முதல்வரை, ஆசிரியர், அரசுப் பணியாளர் சங்கங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். ஒன்றிய அரசு அறிவித்த 3 சதவீத அகவிலைப் படி உயர்வை ஊதியத்துடன் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பிற துறைகளை சேர்ந்த பணியாளர்கள் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சந்திப்புக்கு பிறகு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கு.தியாகராஜன் கூறியதாவது: தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், வருவாய்த்துறை அலுவலர் சங்கம், தமிழக தமிழாசிரியர் கழகம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம், தமிழ்நாடு ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர் சங்கம், தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு தேர்வுத்துறை பணியாளர் சங்கம், தமிழ்நாடு நேரடி நியமன ஆய்வக உதவியாளர் சங்கம், தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், உள்ளிட்ட 30 சங்கத்தை சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகள் தமிழ்நாடு முதல்வரை நேரில் சந்தித்து அகவிலைப் படியை உயர்த்தி வழங்கியதற்காக நன்றி தெரிவித்தோம்.

ஒன்றிய அரசு அறிவித்த 3 சதவீத அகவிலைப் படியை முன்தேதியிட்டு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, அதுவும் தீபாவளிக்கு முன்னதாக அகவிலைப்படியுடன் ஊதியத்தை வழங்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தி வழங்கியுள்ளார். அதற்காக ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுஊதிய தாரர்கள் சார்பில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். அத்துடன் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் பழைய ஓய்வு ஊதிய திட்டம், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு உள்ளிட்ட பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். நமது கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து நிறைவேற்றித் தருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இவ்வாறு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கு.தியாகராஜன் தெரிவித்தார். ஒன்றிய அரசு அறிவித்த 3% அகவிலைப் படியை முன்தேதியிட்டு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, அதுவும் தீபாவளிக்கு முன்னதாக அகவிலைப்படியுடன் ஊதியத்தை வழங்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் ஆணை பிறப்பித்து உள்ளார்.

The post 3% அகவிலைப்படி அறிவிப்பு முதல்வரை சந்தித்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர் appeared first on Dinakaran.

Related Stories: