இலங்கை கடற்படையால் கைதான தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்; இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், IND-TN-10-MM-459 மற்றும் IND-TN-10-MM-904 பதிவெண்கள் கொண்ட இரண்டு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, தான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துவதை சுட்டிகாட்டியுள்ளார். இத்தகைய கைது நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதுடன், அவை கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும் தனது கடிதத்தில் வருத்தத்தோடு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இதுபோன்று நம் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களையும், 199 மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், கூட்டு நடவடிக்கைக் குழுவினால் முன்மொழியப்பட்ட ஆலோசனைகள், மீனவர்கள் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வினைக் கொண்டுவரும் என தான் நம்புவதாகவும் முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post இலங்கை கடற்படையால் கைதான தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! appeared first on Dinakaran.

Related Stories: