பொதுமக்கள் மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு

திருவள்ளூர், அக். 24: தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த பட்டாசுகளை வெடிப்பவர்கள் பாதுகாப்பின்றி வெடிப்பதால் அதிக அளவில் தீக்காயம் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்ட கூடிய சூழ்நிலை உருவாகிறது. இதனால் தமிழக அரசு பட்டாசுகளை வெடிப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் என நேரம் ஒதுக்கி பட்டாசுகளை வெடிக்க உத்தரவிட்டுள்ளது. அவைகனை மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பின்பற்ற வேண்டும் என தீயணைப்பு துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதே நேரத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் திருவள்ளூர் தீயணைப்பு துறை சார்பில் திருவள்ளூர், ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பட்டாசு வெடிப்பது குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவள்ளூர் தீயணைப்பு துறை சார்பில் உதவி மாவட்ட அலுவலர் வில்சன் ராஜ்குமார் பட்டாசுகளை வெடிக்கும் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என விளக்கம் அளித்தார். அதே நேரத்தில் பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காட்டினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் கே.ஜி.முரளிதரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் இந்த விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்பு துறையினர் கொடுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பொன்னேரி: பொன்னேரி தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் சம்பத் தலைமையில், தீயணைப்பு துறை அலுவலக வளாகத்தில் வைத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் எற்படுத்தப்பட்டு, துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தீத்தடுப்பு செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. மேலும், மீஞ்சூர், பொன்னேரி, மெதூர், பழவேற்காடு, திருப்பாலைவனம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள பள்ளிகள், பேருந்து நிறுத்தங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதி போன்ற இடங்களில் தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் மற்றும் பணியாளர்கள் நேரடியாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி, பட்டாசு வெடிக்கும் போது கையாள வேண்டிய முறைகள் மற்றும் பட்டாசால் ஏற்படும் தீ விபத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை செயல்முறை விளக்கங்களால் எடுத்துக்கூறி, துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post பொதுமக்கள் மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: