தொடர் ஏப்பம் தீர்வு என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

நாம் சாப்பிடும்போது உணவுடன் சேர்த்து சிறிது காற்றையும் விழுங்குகிறோம். அந்தக் காற்றை இரைப்பை வெளியேற்றும் போது தான் ‘ஏப்பம்’ உண்டாகிறது. ஒரு நாளில் ஒருமுறை ஏப்பம் வருவது இயல்பானது. ஆனால், தொடர் ஏப்பம் வரும்போது, நமக்கு எரிச்சலையும், அருகில் இருப்பவர்களை முகம் சுளிக்கவும் வைக்கும். அதுபோன்று, வேகமாகச் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களைப் பருகுவது போன்ற பல காரணங்களாலும் ஏப்பம் வரும்.

இரவில் தாமதமாகச் சாப்பிடும்போதும், மசாலா சேர்த்த உணவுகளை அதிகமாக உண்ணும்போதும் இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரிக்கும். இதனால் நெஞ்செரிச்சலுடன் புளிப்பான ஏப்பம் உண்டாகும். அதுபோன்று, சாப்பிட்டவுடன் படுத்தால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு ஏப்பம் வரும். அடிக்கடி, அதிக சத்தத்துடனும், ஒருவித வாடையுடனும் வரும் ஏப்பம் அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று புண் ஆகியவற்றின் அறிகுறி ஆகும். ஏப்பத்தைக் கட்டுப்படுத்த என்ன கை வைத்தியம் உள்ளது தெரிந்துகொள்வோம்:

இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தன்மையைக் குறைக்கக் கூடிய கீரை வகைகள், இஞ்சி, சோம்பு, சீரகம் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அடிக்கடி வரும் ஏப்பத்தைத் தடுக்க முடியும். சிறிதளவு புதினா இலைகளை கொதிக்கும் தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் நன்றாகக் கொதிக்கவிட்டு, பின்பு அந்த நீரை வடிகட்டி அதனுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்து வர, நாளடைவில் ஏப்பம் வருவது கட்டுப்படும்.

வாயுத் தன்மை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும்போது ஏலக்காய் டீ குடிப்பது செரிமானத்தைத் துரிதப்படுத்த உதவும். இதனால் ஏப்பம் வருவது குறையும். உணவு சாப்பிடுவதற்கு முன்பு சூடான நீரில் சிறிது பெருங்காயத்தைக் கலந்து குடித்தால், ஏப்பம் உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்னைகள் குணமாகும். வயிற்றுக் கோளாறுகளை குணமாக்கும் திறன் தயிருக்கு உண்டு. எனவே, தயிரில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏப்பம் வருவதைத் தடுக்கும். வாயு தொடர்பான கோளாறுகள் நீங்கினாலே தொடர் ஏப்பம் வருவது நாளடைவில் குணமாகும். அதற்கு பூண்டு சிறந்த மருந்தாகும். எனவே தினமும் பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ள பூண்டில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள் ஏப்பம் வருவதைத் தடுக்கும்.

தொகுப்பு: ரிஷி

The post தொடர் ஏப்பம் தீர்வு என்ன? appeared first on Dinakaran.

Related Stories: