சிறைத்துறை டிஐஜி, எஸ்பி, ஜெயிலர் திடீர் சஸ்பெண்ட் வேலூர் சிறை கைதியை தாக்கிய விவகாரம்

வேலூர், அக்.23: வேலூர் சிறை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி, எஸ்பி, ஜெயிலர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார்(30), வேலூர் சிறையில் தாக்கப்பட்ட புகாரின்பேரில் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டார். இவர் டிஐஜி வீட்டில் பணம், நகைகளை திருடியதாக புகார் எழுந்தது. இதனால் அவர் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்ததன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில், வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கும், வேலூர் கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் சென்னை புழல்2 சிறைக்கும் மாற்றப்பட்டனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெரிய குற்றத்தில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்நிலையில், கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சிறை டிஐஜி ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

The post சிறைத்துறை டிஐஜி, எஸ்பி, ஜெயிலர் திடீர் சஸ்பெண்ட் வேலூர் சிறை கைதியை தாக்கிய விவகாரம் appeared first on Dinakaran.

Related Stories: