திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை அதிமுக பற்றி எரிவதை எடப்பாடி அணைக்கட்டும்: முத்தரசன் காட்டம்

திருச்சி: திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அதிமுக பற்றி எரிவதை எடப்பாடி முதலில் அணைக்கட்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார். திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுகவில் இருந்து கூட்டணி கட்சிகள் வெளியேறி விடும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது அவரது ஆசை மற்றும் விருப்பம். அவரது கட்சி பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

முதலில் அதை அணைப்பதற்கு ஏற்பாடு செய்யட்டும். திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம், ஒன்றாக இருக்கிறோம். இந்த அணி தொடரும், மேலும் பலப்படும். பல்வேறு நிகழ்வுகளில் காவல்துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர். நடவடிக்கை எடுத்தால் அராஜக அரசு என்கின்றனர்.

அனைத்து பிரச்னைகளுக்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும். நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் பாடலை மாற்றுவேன் என சீமான் கூறுகிறார். அவர் ஆட்சிக்கு வரும்போது பார்த்து கொள்ளலாம். ஆனால், தற்போது தமிழ்த்தாயை மதிக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை சீமான் இப்போது கூறட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை அதிமுக பற்றி எரிவதை எடப்பாடி அணைக்கட்டும்: முத்தரசன் காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: