பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ’ அறிமுகம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் சென்னையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ’ அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் சமூக நல ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது, அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை’ தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன. அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தேவையான தகுதிகள்:

* பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

* கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

* 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

* 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

* சென்னையில் குடியிருக்க வேண்டும்

இதற்கென, சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் தமிழ்நாடு அரசு CNG/Hybrid ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும். ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்காக வங்கிகளுடன் இணைக்கப்படும். சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலருக்கு, 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை-1 என்ற முகவரிக்கு 23.11.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ’ அறிமுகம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: