தங்கம் விலை கிடுகிடு ஒரே நாளில் ரூ.640 எகிறியது: சவரன் ரூ.58 ஆயிரத்தை நெருங்கியதால் நகை வாங்குவோர் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று கிடுகிடுவென சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. அதே நேரத்தில் சவரன் ரூ.58 ஆயிரத்தை நெருங்கியதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 16ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,120க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற புதிய உச்சத்தையும் தொட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,160க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,280க்கும் விற்கப்பட்டது.

இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் நேற்று தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது. அதாவது, நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,240க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,920 என்ற புதிய உச்சத்தையும் தொட்டது. அதே நேரத்தில் சவரன் ரூ.58 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1160 உயர்ந்துள்ளது. வருகிற 31ம் தேதி(வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை வருகிறது.

தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக தனியார் நிறுவனங்களில் போனஸ் வழங்குவது வழக்கம். இந்த பணத்தை பயன்படுத்தி நிறைய பேர் தங்கள் மகள், மகன்களுக்கு நகை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தை தொட்டு வருவது தீபாவளிக்காக நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.105க்கு விற்பனை செய்யப்பட்டது.

The post தங்கம் விலை கிடுகிடு ஒரே நாளில் ரூ.640 எகிறியது: சவரன் ரூ.58 ஆயிரத்தை நெருங்கியதால் நகை வாங்குவோர் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: