இந்தாண்டு இறுதி வரை பருவமழை இருப்பதால் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்புகழ் குழுவின் பரிந்துரைப்படி 1,135 கிலோ மீட்டர் தூரத்திற்கு வடிகால் அமைக்கப்பட வேண்டிய நிலையில், 785 கிலோ மீட்டர் தூரத்திற்குதான் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூறப்பட்டு இருக்கிறது. முதல்வரும் திருப்புகழ் குழுவின் பரிந்துரைப்படி இன்னும் 30 விழுக்காடு வடிகால் பணிகள் மீதம் உள்ளன என்று தனது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைத்த திருப்புகழ் குழு 2022 ம் ஆண்டு மே மாதம் தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது. பின்னர் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.

இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 29 மாதங்கள், இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 19 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், இன்னமும் 30 விழுக்காடு பணிகள் மீதம் இருக்கிறது. கடந்தாண்டு நவம்பரில் 98 விழுக்காடு வடிகால் அமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுவிட்டதாகவும், மூன்று கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒன்பது இடங்களில் இணைப்பு பணிகள் மட்டுமே மீதமுள்ளன என்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்த நிலையில், ஒரு வருடம் கழித்து 30 விழுக்காடு பணிகள் மீதமுள்ளது என்று கூறுவது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. எனவே, இந்தாண்டு இறுதி வரை வடகிழக்கு பருவமழை நீடிக்கும் என்ற நிலையில், மீதமுள்ள 30 விழுக்காடு வடிகால் அமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இந்தாண்டு இறுதி வரை பருவமழை இருப்பதால் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: