கள்ளக்குறிச்சி பேருந்துநிலையம் அருகே தனியார் சூப்பர் மார்க்கெட்டில் இன்று காலை தீ விபத்து: ஊழியர்கள் உயிர் தப்பினர்


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் இன்று காலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவமாக ஊழியர்கள் உயிர் தப்பினர். கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் உள்ள ஜெனரேட்டர் ரூமில் திடீரென்று புகை வெளிவந்தது. பின்னர் சிறிதுநேரம் கழித்து ஜெனரேட்டர் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறி உயிர் தப்பினர். பின்னர் உடனடியாக கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். ஆனால் ஜெனரேட்டர் முழுவதும் எரிந்து சேதமானது. அதிர்ஷடவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. மேலும் அங்குள்ள கட்டிடம் மற்றும் பொருட்கள் இருந்த இடத்தில் தீ பரவவில்லை. தீபாவளி நெருங்குவதால் இரவு முழுவதும் கடையின் உள்ளே வேலை நடந்ததாகவும், இதனால் தான் ஜெனரேட்டர் சூடாகி தீப்பிடித்தது எரிந்ததாகவும் கூறப்படுகிறது. தனியார் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

The post கள்ளக்குறிச்சி பேருந்துநிலையம் அருகே தனியார் சூப்பர் மார்க்கெட்டில் இன்று காலை தீ விபத்து: ஊழியர்கள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: