பி.எம்.கிசான் விவசாய பயனாளிகளுக்கு இ-கே.ஒய்சி கட்டாயம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: பி.எம்.கிசான் விவசாய பயனாளிகள் பிரதம மந்திரி கவுரவ நிதியை தொடர்ந்து பெற்று பயனடைய இ-கே.ஒய்சி கட்டாயம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரி கவுரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருட்கள் கொள்முதல் செய்வதற்காக உதவித் தொகையாக விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ₹2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ₹6 ஆயிரம் என 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, பிரதம மந்திரி கவுரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் 18 தவணை உதவித் தொகை தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகை பெறுவதற்கு விவசாய பயனாளிகள் அனைவரும் இ-கே ஒய்சி கட்டாயம் செய்திருக்கவேண்டும்.

இ-கே ஒய்சி பதிவேற்றம் ஆனது (pmkisan.gov.in) என்ற இணையதளம் மற்றும் பிஎம் கிசான் செயலியில் உள்ள பயனாளிகள் தங்களின் ஆதார் எண்ணை உள்ளிட்டு, ஆதாரில் பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச் சொல்லை உள்ளிட்டு அங்கீகாரம் செய்திடலாம். அல்லது பயனாளிகள் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி தங்களின் கை விரல் ரேகை கொண்டு தங்களின் இ – கேஒய்சி பதிவேற்றம் செய்திடலாம். மேலும், தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களை தொடர்பு கொண்டு பிஎம் கிசான் மொபைல் ஆப் மூலமாக அங்கீகாரம் அடிப்படையில் இ – கேஒய்சி பதிவேற்றம் செய்திடலாம். எனவே விவசாயிகள் தங்களின் இ-கே ஒய்சியினை வரும் 25ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து பிரதம மந்திரி கவுரவ நிதியை தொடர்ந்து பெற்று பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

The post பி.எம்.கிசான் விவசாய பயனாளிகளுக்கு இ-கே.ஒய்சி கட்டாயம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: