பாலஸ்தீன மக்களுக்கான நீதியை இந்திய அரசு பெற்று தர வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்


சென்னை: பாலஸ்தீனம், லெபனான், சிரியா ஆகிய நாடுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எம்.பி. ரவிக்குமார்., விசிக எம்.எல்.ஏ.,க்கள் ஆளூர் ஷா நவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு, விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு ஆகியோரும் பங்கேற்று இஸ்ரேல் அரசுக்கு எதிராகவும், இந்திய அரசின் நிலைபாட்டை கண்டித்தும் கண்டன முழங்களை எழுப்பினர்.

தொடர்ந்து திருமாவளவன் பேசியதாவது: இந்திய அரசாங்கத்தினுடைய நிலைப்பாடு இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கக்கூடாது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஐநா பொதுச் செயலாளருக்கு அச்சுறுத்தலாக இஸ்ரேல் செயல்படுகிறது. அதை கண்டிக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசாங்கத்திற்கு உள்ளது. இந்தியா இஸ்ரேலை கண்டிக்க முடியாது என்ற நிலையில் உள்ளது. அதன் காரணமாகதான் நாம் இந்த போராட்டத்தை முன்னெடுக்கிறோம்.  முதலில் பாலஸ்தீன மக்கள், இஸ்ரேல் மக்களை வரவேற்றனர். ஆனால் இஸ்ரேல் மக்கள் எண்ணிக்கை பெருக்க பெருக்க பாலஸ்தீன மக்கள் வெளியேறினர்.

இதனை எதிர்த்தனர், தற்காத்து கொள்ள ஆயத்தம் செய்தனர். ரவுடிகளுக்கு புரியும் மொழியில் சொல்வோம் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியது போல, இஸ்ரேலுக்கு புரியும் வகையில் பாலஸ்தீனம் தாக்குதல் நடத்தியது. இப்படித்தான் ஆயுதக்குழுக்கள் உருவாகின. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதுதான் நீதி. இந்தியா பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கம் நிற்க வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கான நீதியை பெற்று தருவதற்கு இந்தியா துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post பாலஸ்தீன மக்களுக்கான நீதியை இந்திய அரசு பெற்று தர வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: