மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையின் கீழ் அரச்சலூர், அவல்பூந்துறை, எழுமாத்தூர், கணபதிபாளையம் மற்றும் ஜெயராமபுரம் என 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதேபோல், 33 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் ஒவ்வொரு சுகாதார மருத்துவமனைக்கும் ஒரு டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல், 30க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சித்தா, ஆயுர்வேத மருத்துவம், பல் மருத்துவம், பிசியோதெரபி, லேப், எக்ஸ்ரே, கர்ப்பிணி பெண்களுக்கு அறுவை சிகிச்சை என மொடக்குறிச்சி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதேபோல் மொடக்குறிச்சி மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகள் கொண்ட பிரசவ வார்டு உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் இருந்து பிரசவிக்கும் வரை இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் மாதம் ஒன்றுக்கு 25 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாதம் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்டோருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இங்கு செயல்பட்டு வரும் காசநோய் பிரிவில் நோயாளிகளுக்கு டெஸ்ட் எடுக்கும் கருவி உள்ளது. இந்த கருவி மூலம் ஆய்வுக்கு உட்படுத்தி உடனடியாக காசநோய் உள்ளதா? என உறுதி செய்யப்பட்டு விடும். மொடக்குறிச்சி அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையை பொருத்தவரை மொடக்குறிச்சி, எழுமாத்தூர், அரச்சலூர், அவல்பூந்துறை, கணபதிபாளையம், ஜெயராமபுரம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருவதால் சராசரியாக புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. அதேபோல் கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், மொடக்குறிச்சி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் பட்சத்தில் கூடுதலாக அறுவை சிகிச்சைகள், மகப்பேறு சிறப்பு சிகிச்சைகள், எலும்பு முறிவு சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து வகை மருத்துவ சிகிச்சைகளும் நோயாளிகள் பெற முடியும். மேலும், பிரேத பரிசோதனை மொடக்குறிச்சி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப மருத்துவமனையில் இருந்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அதேபோல், மொடக்குறிச்சி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப மருத்துவமனையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களிலிருந்து அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்கும் மருத்துவமனையில் மொடக்குறிச்சி மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை முதன்மையாக திகழ்ந்து வருகிறது. அதேபோல், குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகளிலும் அதிக அளவில் மொடக்குறிச்சி மேம்படுத்தப்பட்ட சுகாதார மருத்துவமனையாக உள்ளது. மேலும் பிரசர், சுகர் போன்றவைகளுக்கு 2,800க்கும் மேற்பட்டோர் இந்த மருத்துவமனையில் மருந்துகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, மொடக்குறிச்சி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தினால் புற நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் நோயாளிகள் இந்த மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற ஏதுவாக இருக்கும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.அருள்மொழி கூறும்போது:

மொடக்குறிச்சி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் பிரசவம் இங்கு பார்க்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சித்தா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினசரி நாள் ஒன்றுக்கு 250க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த மாவட்ட சுகாதார அலுவலர் மூலம் அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற குழுவினர் நேரில் ஆய்வு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: