தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.200 அதிகரிப்பு: நகை பிரியர்கள் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை இந்த ஆண்டின் ஏப்ரல் மாத தொடக்கத்தில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் அதன்பிறகு ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் தங்கம் விலை சரிந்தது. அமெரிக்க பெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தங்கத்தின் விலை சரிவது நின்றது.

அதன் பிறகு வேகமாக தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தங்கத்தின் விலை இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் சரிந்த நிலையில், மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இனிவரும் நாட்களில், பல்வேறு பொருளாதார காரணிகள் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த 9ம் தேதி தங்கம் விலை கடுமையான சரிவைக் கண்டது. தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.560 குறைந்து ரூ.56,240க்கு விற்கப்பட்டது.

பண்டிகை காலத்தில் தங்கம் விலை கடும் சரிவைக் கண்டது நகை பிரியர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், ஆயுத பூஜையான நேற்று முன்தினமும் மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,095-க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,760-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை நேற்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,120-க்கும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சுபகாரியங்களுக்கு தங்கம் வாங்கும் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

The post தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.200 அதிகரிப்பு: நகை பிரியர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: