கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கழிவு மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கழிவு மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என மார்க்கெட் வளாகத்தில் ₹84 லட்சத்தில் புதிய மருத்துவமனை கட்டும் பணியை பார்வையிட்டு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில், கோயம்பேடு சுற்றுவட்டார பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு ₹84 லட்சத்தில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் அங்காடி நிர்வாக குழு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கோயம்பேடு வணிக வாளாகத்தில் அமைக் கப்பட இருக்கும் மழைநீர் வடிகால்வாய் திட்ட பணியை பார்வையிட்டார்.

ஆய்வின்போது, சென்னை வளர்ச்சி குழுமம் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, சென்னை மாநகராட்சியின் மண்டல வருவாய் ஆணையர் பிரவீன், அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி, பொறியாளர்கள் பாலமுருகன், ராஜன்பாபு, பெரியசாமி, உதவி பொறியாளர் வீரராகவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதையடுத்து நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில்;
பருவமழை முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக கோயம்பேடு மொத்த அங்காடியில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வாக முதற்கட்டமாக 15 கோடி ரூபாய் செலவில் புதிய மழைநீர் வடிகால்வாய் பணி துவங்கப்பட உள்ளது. கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் ஏற்கனவே இருக்கின்ற 850 மீட்டர் நீளம் கொண்ட மழைநீர் கால்வாயை சீரமைக்கும் பணி விறு விறுப்பாக நடைபெறுகிறது. தற்போது கோயம்பேடு மார்க்கெட் அருகில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவ தால் இந்த பணி முடிவு பெற்ற பிறகு புதிதாக கட்டமைக்கப்பட இருக்கிற 770 மீட்டர் நீளம் கொண்ட கால்வாய் பணி தொடங்கப்படும்.

பெருவெள்ளம் காலத்தில் கோயம்பேடு அங்காடியில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு 60 எச்பி உயர்திறன் கொண்ட ராட்சத மோட்டார்கள் உடனடியாக நிறுவதற்கு உத்தரவிட்டுள்ளேன். காய்கறி சந்தையில் மழை காலத்தில் தேங்கும் காய்கறி கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த கூடுதலாக 20 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். காய்கறி கழிவு மூலம் சுதாதார சீர்கேடு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் முதலமைச்சர் தனது பணிகளை மேற்கொண்டு வரும் வேளையில், சொந்த குடும்பத்தில் இழப்பு ஏற்பட்ட போதிலும் மக்களுக்கு பிரச்னை என்றவுடன் தொடர்ந்து 3வது நாளாக ஓய்வின்றி களத்தில் துணை முதலமைச்சர் பணியாற்றி வருகிறார். இரண்டு நாட்களாக தனது மாமா இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் நேற்று இரவு ரயில் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இவரது செயல் எங்களை போன்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக உள்ளது என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கழிவு மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: