புதுப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ₹2.26 லட்சம் பறிமுதல்

பண்ருட்டி, அக். 10: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டையில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 100 பத்திரங்கள் வரை பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பத்திரப்பதிவு குறைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவில் முறைகேடு நடப்பதாகவும், பத்திரம் பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் பெறப்படுவதாகவும், புரோக்கர் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் கடலூர் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி (பொறுப்பு) சத்தியராஜ் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை அதிரடி சோதனை நடத்தினர். அலுவலக வாயில் கதவை பூட்டிவிட்டு உள்ளே பணியில் இருந்த சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள், வெளி நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது, வெளிநபர்கள் யாரையும் அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதேபோல் உள்ளே இருந்தவர்களையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணையில், கணக்கில் வராத 2,26,400 ரொக்க பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post புதுப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ₹2.26 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: