தலித் வீட்டில் ராகுல் காந்தி சமையல்: பகுஜன்களின் உரிமையை காங்கிரஸ் பாதுகாக்கும் என அறிவிப்பு

புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த அஜய் துக்காராம் சனாடே, அஞ்சனா துக்காராம் சனாடே வீட்டிற்கு சென்ற தனது சமீபத்திய வீடியோவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமூக ஊடகத்தில் நேற்று பகிர்ந்தார். அதில், ராகுல், சமையலறையில் சென்று சமைக்க உதவுவதோடு, அத்தம்பதியுடன் பேசியபடி உணவருந்தினார். இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில் ராகுல் காந்தி கூறியதாவது: இன்றும் கூட, தலித் சமையலறை பற்றி வெகுசிலருக்குத்தான் தெரியும். ‘மராத்வாடாவின் தலித் சமையலறைகள்’ என்கிற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் சாஹு படோல், ‘தலித்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது’ என கூறியிருக்கிறார்.

நிஜமாகவே அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், எப்படி சாப்பிடுகிறார்கள், அதன் சமூக, அரசியல் முக்கியத்துவத்தால் ஏற்பட்ட ஆர்வத்தினால் அஜய், அஞ்சனா தம்பதியினர் வீட்டிற்கு சென்றேன். அவர்களும் வீட்டிற்குள் அழைத்து எனக்கு மரியாதை செய்தார்கள். சமையலறையில் அவர்களுக்கு உதவினேன். நாங்கள் கீரை, துவரம் பருப்பு, கத்திரிக்காய் கொண்டு மசியல் சமைத்தோம். சாதி மற்றும் பாகுபாடு குறித்து சனாடே தம்பதியினர் அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தலித் உணவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை குறித்தும் அதை ஆவணப்படுத்த வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் உணவருந்தியபடி விவாதித்தோம். அரசியலமைப்பு பகுஜன்களுக்கு உரிமைகளை வழங்குகிறது. அந்த அரசியலமைப்பை நாங்கள் பாதுகாப்போம். இவ்வாறு ராகுல் காந்தி கூறி உள்ளார்.

 

The post தலித் வீட்டில் ராகுல் காந்தி சமையல்: பகுஜன்களின் உரிமையை காங்கிரஸ் பாதுகாக்கும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: