மாற்றுத்திறனாளிகளை அவமதித்த விவகாரம் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன்: முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணுவுக்கு எதிராக சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 7ம் தேதி அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கோரி மகா விஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் நான் பேசவில்லை. எனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கைதானேன்.

காவலில் வைத்து போலீசார் விசாரித்த போது முழு ஒத்துழைப்பு வழங்கினேன். எனது அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகள் என அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்று கூறியிருந்தார். இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மகா விஷ்ணுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

The post மாற்றுத்திறனாளிகளை அவமதித்த விவகாரம் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன்: முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: