போரூர் அருகே நரிக்குறவர் சமூக பெண் மீது சரமாரி தாக்குதல்: ரத்த வெள்ளத்தில் மயங்கிய பெண் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னை போரூர் பகுதியில் வீட்டுவாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிட நரிக்குறவ சமூக பெண் ஒருவரை நபர் ஒருவர் அரிசி மூட்டையை மேலே போட்டு கட்டையால் கொலைவெறி தாக்குதல் நடத்திய சிசிடிவிக்காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே போரூர் அடுத்த மாதா நகர் மெயின் ரோடு பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பெண்கள் அருகே இருந்த வீட்டு வாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் வீட்டுவாசலில் அமர்ந்திருந்த பெண்களை தகாத வார்த்தைகளால் பேசி திட்டியதுடன் ராதா என்ற நரிக்குறவ பெண்ணின் மீது பைக்கில் எடுத்து வந்த அரிசி மூட்டையை மேலே போட்டுள்ளார். பின்னர் வீட்டினுள் சென்று கட்டை ஒன்றை எடுத்து வந்து அந்த பெண்ணை சரமாரியாக தலையில் தாக்கினார். இதில் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பூவிருந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அந்த பெண்ணுக்கு தலையில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அது தொடர்பாக தற்போது மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நரிக்குறவ பெண் என்பதால் அவரை மனிதாபிமானம் இன்றி வீடு வாசலில் கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது சிசிடிவியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post போரூர் அருகே நரிக்குறவர் சமூக பெண் மீது சரமாரி தாக்குதல்: ரத்த வெள்ளத்தில் மயங்கிய பெண் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: