பரங்கிமலை கன்டோன்மென்ட் போர்டு மைதானத்தில் ரூ.2.10 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு திடல்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார்

சென்னை: பரங்கிமலை வடக்கு பரேடு ரோட்டில் கன்டோன்மென்ட் போர்டு சார்பாக ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன ஒருங்கிணைந்த விளையாட்டு மைதான திறப்பு விழா நேற்று காலை நடந்தது. இதை, ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல். முருகன் திறந்து வைத்தார். பின்னர் விளையாட்டு திடல்களை பார்வையிட்டு வீரர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறுகையில், பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை சேவை வாரமாக கடைப்பிடித்து வருகிறோம்.

தூய்மை இந்தியாவை மேம்படுத்தும் விதமாக அரசு பணியிடங்களில் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இந்தியா முழுவதும் தூய்மை பாரதம் இயக்கம் செப்டம்பர் 17ல் இருந்து அக்டோபர் 2ம் தேதி வரை அனைத்து இடங்களிலும் நடைபெறுகிறது. 2014ல் இருந்து 2019 வரை இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் மோடியின் ஆட்சியில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தில் அரசு அலுவலகங்களை தூய்மைப்படுத்துவது, 30 ஆண்டுகளாக உள்ள ஆவணங்களை சுத்தம் செய்வது, அரசு அலுவலகங்களில் உள்ள மாசுபடித்த சூழலை மாற்றி தூய்மைப்படுத்தி வருகிறோம்.

தாயின் பெயரைச் சொல்லி ஒரு மரம் நடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தவர்.அதனைத் தொடர்ந்து அனைத்து இடங்களில் மரம் நடும் விழா நடந்து கொண்டிருக்கிறது. அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 2 வாரம் சேவை வாரமாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் கன்டோன்மென்ட் போர்டு தலைவர் பிரிகேடியர் ஜி எஸ் பந்தர், நிர்வாக அதிகாரி வினோத் விக்னேஸ்வரன், நியமன உறுப்பினர் பி.ஏ.குணா, காஞ்சிபுரம் மாவட்ட ஹாக்கி சங்க பொதுச்செயலாளர் தாஸ்கிருஷ்ணன் மற்றும் விளையாட்டு வீரர்கள் விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post பரங்கிமலை கன்டோன்மென்ட் போர்டு மைதானத்தில் ரூ.2.10 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு திடல்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: