டெல்லியில் பரபரப்பு ரூ.5,620 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்: சர்வதேச கும்பல் சுற்றிவளைப்பு

புதுடெல்லி: டெல்லி, என்சிஆர் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக குறிப்பிட்ட போதை பொருள் கும்பல்களை போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், தெற்கு டெல்லி மெக்ராலி பகுதியில் போதை பொருட்களுடன் ஒரு கும்பல் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரிந்தது. அங்கு சென்று திடீரென சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 560 கிலோ கோகைன் என்ற போதை பொருளையும், நீரில் விளைவிக்கப்படக் கூடிய உயர் வகை கஞ்சா 40 கிலோவையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.5,620 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இவற்றை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி விற்க இருந்த 4 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர் துஷார் கோயல் (40), ஹிமான்சு குமார் (27), அவுரங்கசீப் சித்திக் (23), மற்றும் பாரத் குமார் ஜெயின் (48) என தெரிய வந்துள்ளது. இவர்களில் ஜெயின் தவிர மற்ற 3 பேரும் டெல்லியை சேர்ந்தவர்கள். ஜெயின் மும்பையை சேர்ந்தவர். இவர்களுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால், அவர்களிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

The post டெல்லியில் பரபரப்பு ரூ.5,620 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்: சர்வதேச கும்பல் சுற்றிவளைப்பு appeared first on Dinakaran.

Related Stories: