மணலி மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

திருவொற்றியூர்: சென்னை மணலி மண்டலம் 21வது வார்டு பாடசாலை தெருவில் 2.64 கோடி ரூபாய் செலவில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நடைபெறும் இந்த சாலைக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் யாரும் ஆக்கிரமிப்பு அகற்ற முன்வரவில்லை.

இந்தநிலையில் கடந்த மாதம் 22ம் தேதி மணலி மண்டல அதிகாரிகள், பாடசாலை தெரு மார்க்கெட் சந்திப்பில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்தனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள், நீதிமன்றத்தை நாடியதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்தநிலையில், இன்று காலை மீண்டும் மணலி பாடசாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், மண்டல உதவி ஆணையர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் 2 பொக்லைன் இயந்திரங்களுடன் வந்து ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து அகற்றினர்.

இதுபற்றி மக்கள் கூறுகையில், சுமார் 20 ஆண்டுகால போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு கண்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி’ என்றனர். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மழைநீர் கால்வாய், சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு விரைவில் மாநகர பேருந்துகள் தங்கு தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். எஞ்சியுள்ள ஆக்கிரமிப்புகளும் படிப்படியாக அகற்றப்படும்’’ என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மணலி மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: