உண்மையை சகித்துக்கொள்ள முடியாமல் பாஜ என்னை மவுனமாக்க துடிக்கிறது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: உண்மையை சகித்துக்கொள்ள முடியாததால் பாஜ தன்னை மவுனமாக்க துடிப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த ராகுல்காந்தி, இந்திய -அமெரிக்கர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘’சண்டை எதைப்பற்றியது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அது அரசியலைப்பற்றியது அல்ல. ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிந்து குருத்வாராவிற்குள் செல்லமுடியுமா? கடா அணிந்து செல்ல முடியுமா? என்பது கேள்வியாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்நிலையில் ராகுலின் கருத்து சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில், அமெரிக்காவில் நான் கூறிய கருத்துக்களை பற்றி பாஜ பொய்களை பரப்பி வருகின்றது. இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள ஒவ்வொரு சீக்கிய சகோதர, சகோதரிகளை நான் கேட்க விரும்புகிறேன். நான் கூறியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? ஒவ்வொரு சீக்கியரும் வாழக்கூடிய நாடாக இந்தியா இருக்க வேண்டாமா? ஒவ்வொரு இந்தியனும் அச்சமின்றி தங்களது மதத்தை சுதந்திரமாக பின்பற்ற முடியுமா? வழக்கம் போல் பாஜ பொய்யை கையாண்டு வருகின்றது. அவர்களால் உண்மையை தாங்கி கொள்ள முடியாததால் என்னை மவுனமாக்குவதற்கு துடிக்கிறார்கள். ஆனால் இந்தியாவை வரையறுக்கும் மதிப்புக்களான ஒற்றுமை, சமத்துவம் மற்றும் அன்பிற்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் சீக்கியர் குறித்து பேசியதையும் அவர் இணைத்துள்ளார்.

The post உண்மையை சகித்துக்கொள்ள முடியாமல் பாஜ என்னை மவுனமாக்க துடிக்கிறது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: