அரசு கல்லூரியில் சீட் வழங்காமல் அலைக்கழிப்பு மருத்துவ கல்வி இயக்குனருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு

மதுரை: அரசு கல்லூரியில் சீட் வழங்காமல் அலைக்கழித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மருத்துவ கல்வி இயக்குனருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த அருணகிரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மகள் 2017-18ல் நடந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். கல்லூரி ஒதுக்கீடு தொடர்பான கவுன்சலிங் முறையாக நடக்காததால் எனது மகளின் எதிர்காலம் பாதித்தது. எனவே, ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் மகளுக்கு அரசு கல்லூரி எனக் குறிப்பிட்டு ஒரு தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் இடம் வழங்கப்பட்டு, அதற்கான கற்பித்தல் கட்டணமாக ரூ.9,600 வசூலித்துள்ளனர். ஆனால் மனுதாரர் கல்லூரியில் சேர்ந்த பின்பு அது சுயநிதி கல்லூரி எனக் குறிப்பிட்டு, ரூ.3.70 லட்சம் கல்வி கட்டணமும், ரூ.75 ஆயிரம் விடுதி கட்டணமும் கேட்டுள்ளனர். கலந்தாய்வில் மனுதாரருக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி அரசு கல்லூரிகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டது சட்ட விரோதமானது. ஆனால், மருத்துவக் கல்வி இயக்குனர் இதுவரை முறையான பதில் மனுவையும் தாக்கல் செய்யவில்லை. எனவே, மாணவியை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக மருத்துவக் கல்வி இயக்குனருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

The post அரசு கல்லூரியில் சீட் வழங்காமல் அலைக்கழிப்பு மருத்துவ கல்வி இயக்குனருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: