பெங்களூருவில் இருந்து கோவைக்கு காரில் கடத்திய 148 கிலோ குட்கா, பான்பராக் பறிமுதல்: சேலத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது


சேலம்: பெங்களூருவில் இருந்து கோவைக்கு காரில் கடத்திய 148 கிலோ குட்கா, பான்பராக் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சேலத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு போதை புகையிலை பொருட்கள் கடத்தப்படுகிறது. சாதாரண பயணிகள்போல காரில் சிலர் கடத்தி வருகின்றனர். இதனை தடுக்க மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டி பகுதியில் போலீசார் தொடர் வாகன தணிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதற்காக ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார், வாகன சோதனை மற்றும் சந்தேக வாகனங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓமலூர் பண்ணப்பட்டி பிரிவு அருகே நேற்று முன்தினம் மாலை தனிப்படை போலீசார், சந்தேகப்படும்படி வந்த காரை மடக்கி நிறுத்தினர். அதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் இருந்தனர். காருக்குள் சோதனையிட்ட போது, சாக்குமூட்டைகளில் ரூ4 லட்சம் மதிப்பிலான 148 கிலோ பான்பராக், குட்கா, கூல் லிப் உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் இருந்தது. உடனே அவைகளை பறிமுதல் செய்து, அதனை கடத்தி வந்த 3 பேரையும் பிடித்து, தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் மொஹல்லா பகுதியை சேர்ந்த மாணிக்சந்த் (25), மெர்டா மாவட்டம் படகோன் பகுதியை சேர்ந்த மிதேஷ்படியார் (27), மங்கலராம் (25) என தெரியவந்தது. இவர்கள், பெங்களூருவில் இருந்து ரூ4 லட்சம் மதிப்புள்ள போதை புகையிலை பொருட்களை வாங்கிக் கொண்டு கோவைக்கு கடத்தி சென்றது தெரிந்தது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரையும் ஓமலூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

The post பெங்களூருவில் இருந்து கோவைக்கு காரில் கடத்திய 148 கிலோ குட்கா, பான்பராக் பறிமுதல்: சேலத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: