மானாமதுரை ரயில்நிலையத்தில் 2 ஆண்டுகளாக செயல்படாத ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ ஸ்டால்

மானாமதுரை : மானாமதுரை ரயில்நிலையத்தில், ஒன்றிய அரசின் திட்டமான ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு என்ற அரங்கம் இரண்டு ஆண்டுகளாகபயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனை, மானாமதுரை மண்ணின் பெருமை பறைசாற்றும் மண்பாண்ட பொருட்களை காட்சிப்படுத்த இந்த அரங்கத்தை மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒன்றிய அரசின் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் 483 ரயில் நிலையங்களில் நெசவாளர்கள், கைவினைஞர்களின் படைப்புகள், உற்பத்திப் பொருட்களின் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் வணிகத்தை ஊக்கப்படுத்தவும், கைவினைஞர்கள், நெசவாளர்களின் படைப்புகளை பிரபலப்படுத்தும் வகையிலும் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 2022ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

இத்திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டு புடவைகள் விற்பனை அரங்கு கடந்த 2022 மார்ச் 25ம் தேதி அமைக்கப்பட்டது. தெற்கு ரயில்வேக்குட்பட்ட 6 கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் புதிய அரங்குகள் அமைத்து அங்கு காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் பட்டு புடவைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், ராணிப்பேட்டை தோல் தயாரிப்புகள், கைவினைப் பொருட்கள், பழங்குடியினரின் படைப்புகள் என மொத்தம் 350 விதமான உற்பத்திப் பொருட்கள் இந்த அரங்குகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

மண்பாண்ட பொருட்களுக்கு முக்கியத்துவம்: மானாமதுரை மண்ணின் ்பெருமையை நிலைநாட்டும் கடம் தயாரிப்பு இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் செய்யப்படுகிறது. மேலும் மண்ணாலான 280க்கும் ேமற்பட்ட மண்பொருட்கள் நேர்த்தியாகவும் பாரம்பரிய மிக்கதாகவும் தயாரிக்கப்படுவதால் மண்பாண்ட பொருட்களுக்கு மானாமதுரை மிகப் பிரபலமானது என்பதால் இங்கு ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு அரங்கத்தில் மண்பாண்ட பொருட்கள் விற்பனைக்கு ஒதுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள
னர்.

இது குறித்து சமூக ஆர்வலர் ராஜா கூறுகையில், மானாமதுரை மண்பாண்ட பொருட்களுக்கு பிரசித்தி பெற்றது. இங்கிருந்து தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான கலைப்பொருட்கள் அனுப்பபடுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மானாமதுரை ரயில்நிலையம் வழியாக செல்லும் சுற்றுலாபயணிகள், யாத்ரீகர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இந்த தயாரிப்புகள் பயனுள்ளவையாக இருப்பதுடன் இந்த ெதாழிலில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு பொருளாதார மேம்பாடு அடைய உதவும் என்பதால் இந்த அரங்கத்தை மண்பாண்ட பொருட்களுக்கு ஒதுக்கீடு செய்ய ரயில்வேதுறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

The post மானாமதுரை ரயில்நிலையத்தில் 2 ஆண்டுகளாக செயல்படாத ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ ஸ்டால் appeared first on Dinakaran.

Related Stories: