கலசபாக்கம் அருகே டயர் வெடித்ததில் கார் மீது அரசு பஸ் மோதி பெண் உட்பட 2 பேர் நசுங்கி பலி

*பைக்கில் சென்றவர் உட்பட 3 நபர்கள் படுகாயம்

கலசபாக்கம் : கலசபாக்கம் அருகே அரசு பஸ் டயர் வெடித்து, கார் மீது மோதியதில் பெண் உட்பட 2 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும், பைக்கில் சென்றவர் உட்பட 3 நபர்கள் படுகாயமடைந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், பாடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகர்(55). இவரது மனைவி வளர்மதி(52). இவர்களது மருமகள் ஜெயந்தி(22), ஜெயந்தியின் மகள் ரிதன்யா(2). இவர்கள் அனைவரும் காரில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள தேவிகாபுரம் அடுத்த ஊத்தூர் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்விற்கு சென்றிருந்தனர். பின்னர் நேற்று மீண்டும் காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கலசபாக்கம் அடுத்த தென் பள்ளிப்பட்டு அருகே, திருவண்ணாமலையில் இருந்து போளூர் நோக்கி சென்ற அரசு பஸ்சின் முன்பக்க டயர் திடீரென வெடித்து, எதிரே ஞானசேகரன் குடும்பத்தினர் வந்த கார் மீது மோதிவிட்டு சாலையோர மரத்தில் மோதி நின்றது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி, சம்பவ இடத்திலேயே திருக்கோவிலூர் தாலுகா திம்மஞ்சூரை சேர்ர்ந்த கார் டிரைவர் கோபிநாத்(45), ஞானசேகரன் மனைவி வளர்மதி(52) ஆகியோர் உடல் நசுங்கி பலியாகினர். ஞானசேகர், மருமகள் ஜெயந்தி ஆகியோர் படுகாயமடைந்தனர். குழந்தை ரிதன்யா அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியது.

மேலும், விபத்தில் சிக்கிய கார் மோதியதில் எதிரே பைக்கில் வந்த தென் பள்ளிப்பட்டு ஊராட்சி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த வேலு(50) என்பவர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கலசபாக்கம் போலீசார், அப்பகுதியினர் உதவியுடன் கடப்பாரையை பயன்படுத்தி நொறுங்கிய காரில் சிக்கியிருந்த கோபிநாத், வளர்மதி ஆகியோரது சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post கலசபாக்கம் அருகே டயர் வெடித்ததில் கார் மீது அரசு பஸ் மோதி பெண் உட்பட 2 பேர் நசுங்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: