குழந்தை இல்லை எனக்கூறி கணவர் வீட்டில் தொடர் டார்ச்சர் வயிற்றில் சேலை கட்டி கர்ப்பமாக இருப்பதாக கூறி 9 மாதங்களாக நாடகமாடிய பெண்

*டாக்டர் மீது பழிபோட்டு தப்ப முயன்றபோது அம்பலம்

திருமலை : தெலங்கானா மாநிலம் ஜனகாம மாவட்டம் நகுலகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பல்லவி (30). இவருக்கும் ரக்யாதண்டா கிராமத்தை சேர்ந்த சுமதன் (34) என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களில் இருந்து மாமியார், மாமனார் ஆகியோர் பல்லவியிடம், `இன்னும் கர்ப்பமடையாமல் இருக்கிறாயே? உனக்கு ஏதேனும் உடல்நல பிரச்னை இருக்கிறதா?’ என கேட்டுள்ளனர். இதேபோல் கணவரும் அடிக்கடி கேட்டு டார்ச்சர் செய்ய ஆரம்பித்ததால் பல்லவி மன உளைச்சல் அடைந்தார்.

தனக்கு குழந்தை பிறக்காது என எண்ணிய பல்லவி, கர்ப்ப வேஷம் போட திட்டமிட்டார். அதன்படி கடந்த ஜனவரி மாதம், தான் கருவுற்று இருப்பதாக மாமனார், மாமியார் மற்றும் கணவரை நம்ப வைத்தார். இதற்காக அங்குள்ள சுகாதார நிலையத்திற்கு சென்றுவர தொடங்கினார். மாதங்கள் அதிகரிக்க தொடங்கியதும் அதற்கேற்ப தனது வயிற்றில் சேலையை சுற்றி மறைத்து கர்ப்பிணி போல் நாடகமாடி வந்தார்.

இந்நிலையில் தற்போது 9 மாதங்கள் ஆவதாகவும் எனவே எந்த நேரத்திலும் தனக்கு பிரசவம் நடக்கும் எனவும் கணவர் வீட்டில் பல்லவி கூறியுள்ளார். அதற்கேற்ப கடந்த 10ம் தேதி தனக்கு வயிற்று வலி ஏற்படுவதாக கூறி அங்குள்ள சுகாதார நிலையத்தில் உள்ள மகப்பேறு வார்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு பிரசவம் பார்க்கும்படி டாக்டர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு டாக்டர்கள் சிறிதுநேரம் காத்திருக்கும்படி கூறினர்.

ஆனால் அதற்குள் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை பல்லவி திட்டியுள்ளார். பின்னர் உடனே கழிப்பறைக்கு சென்ற அவர், திடீரென சத்தம் போட்டபடி திட்டிக்கொண்டே வெளியே வந்தார். தனக்கு கழிப்பறையில் அபார்ஷன் ஆகிவிட்டதாகவும், இதற்கு டாக்டர்களும், செவிலியர்களும் தான் காரணம் எனக்கூறிவிட்டு வெளியேறினார். ஆனால் சந்தேகமடைந்த செவிலியர்கள் கழிப்பறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு 2 புடவைகள் கிடந்தது. அப்ேபாதுதான் பல்லவியின் நாடகம் அம்பலமானது.

இதுகுறித்து உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பல்லவியை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அப்போது பல்லவி உண்மையை ஒப்புக்கொண்டார். அவர் போலீசாரிடம் கூறுகையில், `எனது கணவர், மாமனார், மாமியார் என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் நான் கர்ப்பமடையவில்லை எனக்கூறி தினசரி டார்ச்சர் செய்தனர். இதனால் வேறு வழியின்றி கர்ப்ப வேஷம் போட்டேன்.

ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சுகாதார நிலையத்திற்கு வந்துவிட்டு சிறிதுநேரம் கழித்து யாருக்கும் சந்தேகம் வராதபடி மீண்டும் வீடு திரும்புவேன். சில சத்து மாத்திரைகளை சாப்பிட்டு அனைவரையும் நம்ப வைத்தேன். கர்ப்ப காலத்திற்கு ஏற்ப வயிற்றின் அளவை பெரிதாக்கவேண்டும் என்பதற்காக மாதந்தோறும் துணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வயிற்றில் மறைத்து கட்டிவந்தேன். ஆனால் 9 மாதங்கள் ஆவதால் இனி, நாடகத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மீது பழிபோட்டுவிட்டு தப்பலாம் என நினைத்தேன். ஆனால் மாட்டிக்கொண்டேன்’ என கூறினார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பல்லவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர் கர்ப்பமடையவில்லை என்பதால் குடும்பத்தினரின் டார்ச்சர் காரணமாக நாடகமாடியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு சில அறிவுரைகளை கூறி பல்லவியை அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளோம்’ என தெரிவித்தனர்.

The post குழந்தை இல்லை எனக்கூறி கணவர் வீட்டில் தொடர் டார்ச்சர் வயிற்றில் சேலை கட்டி கர்ப்பமாக இருப்பதாக கூறி 9 மாதங்களாக நாடகமாடிய பெண் appeared first on Dinakaran.

Related Stories: