மலையாள சினிமாவை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை சிறப்பு குழுவிடம் ஒப்படைப்பு: முக்கிய நடிகர்கள் சிக்குவார்களா?

திருவனந்தபுரம்: ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை சிறப்பு விசாரணைக் குழுவிடம் கேரள அரசு ஒப்படைத்தது. மலையாள சினிமாவில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த ஹேமா கமிட்டி அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் வெளியிட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் முழு அறிக்கையை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் உயர்நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, இந்த அறிக்கையை உடனடியாக போலீஸ் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த அறிக்கையில் போக்சோ உள்பட பல கிரிமினல் வழக்குகள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்று உள்ளதால் புகார் கொடுத்தவர்கள் விரும்பினால் வழக்கு உள்பட சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையை சிறப்பு விசாரணைக் குழுவிடம் கேரள அரசு ஒப்படைத்துள்ளது. குழுவின் தலைவரான குற்றப் பிரிவு ஏடிஜிபி வெங்கடேஷிடம் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு விசாரணைக் குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் ஐஜி ஸ்பர்ஜன் குமார், டிஐஜி அஜிதா பேகம் உள்பட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஹேமா கமிட்டியிடம் நடிகைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். எனவே முக்கிய நடிகர்கள் உள்பட யார் யார் இந்த வழக்குகளில் சிக்கப் போகிறார்கள் என்பது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post மலையாள சினிமாவை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை சிறப்பு குழுவிடம் ஒப்படைப்பு: முக்கிய நடிகர்கள் சிக்குவார்களா? appeared first on Dinakaran.

Related Stories: