தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்

சென்னை: தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு இயல்பைவிட 2டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 5 இடங்களில் 100 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது. வங்கக் கடலில் 2 நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா அருகே கரையைக் கடந்த நிலையில், தற்போது தமிழத்தில் வறண்ட வானிலை நிலவிவருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் அளவு அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக மதுரையில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. நாகப்பட்டினம், திருச்சி, தூத்துக்குடி 100 டிகிரி, கரூர், காரைக்கால், ஈரோடு, பரங்கிப்பேட்டை, தஞ்சாவூர் 99 டிகிரி, சென்னை 97 டிகிரி வெயில் நிலவியது.

பிற மாவட்டங்களில் சராசரியாக 90 டிகிரி வெயில் நிலவியது. இதுதவிர நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது, ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படும் வாய்ப்புண்டு. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக 12ம் தேதி முதல் 17ம் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழைபெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

The post தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் appeared first on Dinakaran.

Related Stories: