சி.ஐ.எஸ்.சி.இ. தேசிய விளையாட்டு போட்டியில் குத்துச்சண்டை போட்டியை நீக்கிய அறிவிப்பு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சி.ஐ.எஸ்.சி.இ. தேசிய விளையாட்டு போட்டிகளில், குத்துச்சண்டை போட்டியில் இருந்து 50 கிலோவுக்கு அதிகமான எடையுள்ள 14 வயது மாணவர்கள் பிரிவை நீக்கியது பாரபட்சமானது என்று சி.ஐ.எஸ்.சி.இக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய பள்ளி சான்றிதழ்கள் தேர்வு கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ) பாடத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 3 ஆயிரம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் வகையில் 2018ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில் 14 வயதுடைய 50 கிலோவுக்கு அதிகமான மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டிக்கு விண்ணப்பித்துள்ளனர். சென்னை அடையாறு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் அல்பெரிக் அபய் என்ற மாணவரும் விண்ணப்பித்துள்ளார்.

செப்டம்பர் 13ம் தேதி ஜார்க்கண்டில் நடக்கும் இந்த குத்துச் சண்டை போட்டியில், 50 கிலோவுக்கு மேல் எடையுடைய 14 வயது மாணவர்கள் பிரிவு நீக்கப்பட்டது. இதை எதிர்த்து அல்பெரிக் அபய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தாண்டு 50 கிலோவுக்கு மேல் உள்ள மாணவிகள் பிரிவு சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் பிரிவை நீக்கியது பாரபட்சமானது. இதுசம்பந்தமான சி.ஐ.எஸ்.சி.இயின் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. ஜார்க்கண்டில் செப்டம்பர் 13ம் தேதி நடக்கும் குத்துச் சண்டை போட்டிகளில், 50 கிலோவுக்கு அதிகமான எடையுள்ள 14 வயது மாணவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சி.ஐ.எஸ்.சி.இக்கு உத்தரவிட்டார்.

The post சி.ஐ.எஸ்.சி.இ. தேசிய விளையாட்டு போட்டியில் குத்துச்சண்டை போட்டியை நீக்கிய அறிவிப்பு ரத்து: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: