பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர கோரி வழக்கு : ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், ஒன்றிய அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாட்டில் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வந்த ஒன்றிய அரசு, பெட்ரோலிய பொருட்களை இதுவரை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வரவில்லை.பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால், அவற்றின் விலை கணிசமாக குறைந்து, மக்கள் பயனடைவர் எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ், வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஒன்றிய ஜி.எஸ்.டி சட்டப்படி, ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைப்படி தான் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்து ஒன்றிய அரசு அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.ஆனால், பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாநில அரசுகள் தனிப்பட்ட முறையில் வரிகள் விதிப்பதால் குறிப்பிடத்தக்க வருவாயை பெறுவதால், இப்பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால், இவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்து மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவும், நாடு முழுவதும் ஒரே விலைக்கு அவற்றை விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 2023ம் ஆண்டு ஒன்றிய நிதி அமைச்சகம், பெட்ரோலியத் துறைக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் கனகராஜ், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு தற்போது ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்குவதாகவும், அதனால் ஏற்படும் விலை குறைப்பு பலன்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால் 100 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் விலை, 60 முதல் 70 ரூபாயாக குறையும் எனவும், எரிவாயு, பெட்ரோல், டீசல் இல்லாமல் அன்றாட வாழ்வை வாழ முடியாது எனத் தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள், தமிழகத்தில் ரேஷன், வீட்டுவசதி, எரிவாயு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது எனவும், டாஸ்மாக் மட்டும் இலவசமாக வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தனர். அரசின் கொள்கை முடிவு என்பதால் அரசுக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.ஒன்றிய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2020ம் ஆண்டு இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கேரளா உயர் நீதிமன்றம், கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டதாகவும், இந்த உத்தரவின் அடிப்படையில் ஒன்றிய அரசு என்ன முடிவெடுத்தது என்பது குறித்து விளக்கமளிக்க அவகாசம் வழங்கக் கோரினார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டனர்.

The post பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர கோரி வழக்கு : ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: