சென்னை மண்டலத்துக்குட்பட்ட 5 மாவட்டங்களில் செப்.30-க்குள் வெள்ளத் தடுப்புப் பணிகளை முடிக்க அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகள் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், நீர்வளத்துறை பொறியாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் இன்று (10.09.2024) ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் பருவமழைக்கு முந்தைய முன்னேற்பாட்டு பணிகளாக ரூ.38.50 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, முக்கிய பகுதிகளான வீராங்கல்ஓடை, ஓட்டேரிநல்லா, விருகம்பாக்கம் அரும்பாக்கம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், வேளச்சேரி ஏரி, கூவம் மற்றும் அடையாறு போன்றவற்றில் உள்ள மிதக்கும் தாவரங்கள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றினை இயந்திரங்களை பயன்படுத்தி அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் வருகிற 30.09.2024-க்குள் முடிக்குமாறும், மேலும் நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகளாக ரூ.590 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, முக்கிய பகுதிகளான தணிகாச்சலம் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய், மாதவரம் ரெட்டேரி மற்றும் கெருகம்பாக்கம் கால்வாய் போன்றவற்றில் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் வருகிற 30.09.2024-க்குள் முடிக்குமாறு அமைச்சர் அறிவுறுதினார்.

மேலும், தேவையான மணல் மூட்டைகள், காலி கோணிகள் மற்றும் சவுக்கு கம்புகள் ஆகியவற்றை பருவமழையினை எதிர்கொள்ள ஏதுவாக ஆங்காங்கே போதுமான இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீர்வளத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். க. மணிவாசன், இ.ஆ.ப., முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) சா. மன்மதன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் மு. ஜானகி மற்றும் அனைத்து சென்னை மண்டல பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை மண்டலத்துக்குட்பட்ட 5 மாவட்டங்களில் செப்.30-க்குள் வெள்ளத் தடுப்புப் பணிகளை முடிக்க அமைச்சர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: