தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.6 கோடி நிதியுதவி: சங்க பொதுக்குழுவில் நன்றி தெரிவித்து தீர்மானம்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.6 கோடி நிதி வழங்கியுள்ள நிலையில், நடிகர் சங்க பொதுக்குழுவில் அவருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் நடிகர் நாசர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் நடிகர் விஷால், பொருளாளர் நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உட்பட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடம் கட்டப்படுவதற்கு அளித்து வரும் ஆதரவுகளுக்காக நடிகர் சங்கப் பொதுக்குழு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. நடிகர் சங்கக் கட்டிடம் ரூ. 25 கோடி வங்கிக் கடன் மூலம் கட்டப்படுகிறது. இதற்கு தேவையான ரூ.12 கோடி வங்கிக் கடன் டெபாசிட் தொகைக்காக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

மேலும் தம் நண்பர்கள் மூலம் ரூ. 5 கோடி வங்கியில் டெபாசிட் செய்வதற்கும் பரிந்துரைகள் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது, அதில் பேசிய சங்க நிர்வாகிகள், சங்கக் கட்டிடத்துக்காக கடன் வாங்கும்போது தேவையான டெபாசிட் தொகையில் பெரும் தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துப் பாராட்டிப் பேசினர்.

மேலும், தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர்களுக்கும், குறிப்பாக வங்கி வைப்புத் தொகைக்காக பெரும் நிதி திரட்டிட ஏற்பாடு செய்தமைக்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

The post தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.6 கோடி நிதியுதவி: சங்க பொதுக்குழுவில் நன்றி தெரிவித்து தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: