டெல்லியில் மோடி, அபுதாபி இளவரசர் இரு தரப்பு பேச்சுவார்த்தை: 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடெல்லி: அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் 2 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். இந்நிலையில், டெல்லி ஐதராபாத் பவனில் அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். இரு தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில், இருதரப்பு உறவை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான பல்துறை உறவுகள் குறித்து இரு தலைவர்கள் விவாதித்தனர். மேலும் புதிய துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதுதவிர, காசா போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்தும் மோடி, நஹ்யான் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்த சந்திப்பை தொடர்ந்து இளவரசர் நஹ்யான் ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி, இளவரசர் நஹ்யான் சந்திப்பைத் தொடர்ந்து, எரிசக்தி துறையைச் சேர்ந்த இரு நாடுகளின் நிறுவனங்கள் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில், நீண்டகால எல்என்ஜி விநியோகத்திற்காக அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி மற்றும் ஐஓசி நிறுவனமும், உணவுப் பூங்காஅமைப்பது தொடர்பாக குஜராத் அரசுக்கும் அபுதாபி டெவலப்மென்டல் ஹோல்டிங் நிறுவனத்திற்கு இடையேயும் ஒப்பந்தம் செய்தன.

 

The post டெல்லியில் மோடி, அபுதாபி இளவரசர் இரு தரப்பு பேச்சுவார்த்தை: 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து appeared first on Dinakaran.

Related Stories: