வானூர் அருகே டயர் பஞ்சராகி நின்ற டிப்பர் லாரி மீது டேங்கர் லாரி மோதி டிரைவர் பலி

வானூர், செப். 6: மேம்பாலத்தில் டயர் பஞ்சராகி நின்ற டிப்பர் லாரி மீது பெட்ரோல் டேங்கர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். கிளீனர் படுகாயம் அடைந்தார். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா தென்கோடிப்பாக்கம் கிராமத்தில் புதுச்சேரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணிக்கு டிப்பர் லாரி ஒன்று திடீரென பஞ்சரானதால் சாலையோரம் நிறுத்தி, பழுதை சரி செய்தனர். அப்போது, திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக அந்த டிப்பர் லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், டேங்கர் லாரியின் முன்பக்கம் நொறுங்கி, பலத்த காயமடைந்த லாரி டிரைவர், கிளீனர் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. மேலும் விபத்தில் சிக்கியது பெட்ரோல் டேங்கர் லாரி என்பதால் தீப்பிடித்துவிடுமோ என மக்கள் லாரியின் அருகில் செல்லவே அச்சமடைந்தனர்.

தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் சிக்கிய லாரி டிரைவர், கிளீனர் ஆகியோரை போராடி மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பகுதியை சேர்ந்த டிரைவர் பிரகாஷ் (40), அருங்குணம் பகுதியை சேர்ந்த கிளீனர் புஷ்பராஜ் என்பது தெரியவந்தது. இந்த விபத்தால், திண்டிவனம்-புதுச்சேரி பைபாஸ் சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜிப்மரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் லாரி டிரைவர் பிரகாஷ் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். கிளீனர் புஷ்பராஜூக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வானூர் அருகே டயர் பஞ்சராகி நின்ற டிப்பர் லாரி மீது டேங்கர் லாரி மோதி டிரைவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: