ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் கைது எம்.ஆர்.விஜயபாஸ்கர் தம்பிக்கு இரண்டு நாள் போலீஸ் காவல்

கரூர்: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் கைதான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பியை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கரூர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷிடம் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலம் அபகரிப்பு மற்றும் கொலை மிரட்டல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உறவினர் பிரவீன் (28), உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி சேகரின் முன்ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவரை சிபிசிஐடி போலீசார், கரூர் சின்னாண்டாங்கோயில் பகுதியில் கடந்த 2ம் தேதி கைது செய்தனர். மேலும் தோட்டக்குறிச்சியை சேர்ந்த செல்வராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் இருவரும் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நிலமோசடி வழக்கு சம்பந்தமாக சேகரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக ஒரு வாரம் போலீஸ் கஸ்டடி கேட்டு சிபிசிஐடி போலீசார் நேற்றுமுன்தினம் கரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1ல் மனு செய்தனர். இந்த மனுவை நேற்று மாலை விசாரித்த நீதிபதி பரத்குமார், சேகரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

 

The post ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் கைது எம்.ஆர்.விஜயபாஸ்கர் தம்பிக்கு இரண்டு நாள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.

Related Stories: