மாநில பிரஸ் கவுன்சில் அமைக்க சட்ட விதிகள் உள்ளதா?: இந்திய பிரஸ் கவுன்சில் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றியபோது பொன்.மாணிக்கவேல் தவறான அறிக்கைகளை தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சேகர்ராம் என்பவர் பத்திரிகையாளர் எனக்கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது சேகர்ராம் போலி பத்திரிகையாளர் என்று பொன்.மாணிக்கவேல் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மூத்த பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய  தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிகையாளர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும். தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மூலமாக மட்டுமே பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டுமே தவிர நேரடியாக வழங்க கூடாது. இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க  விதிகள் உள்ளனவா, மத்திய அரசு சட்டப்படி இந்திய பிரஸ் கவுன்சிலுக்கே அதிகாரம் உள்ளது. மாநில பிரஸ் கவுன்சில்கள் அமைக்க சட்டங்கள் உள்ளதா என்று இந்திய பிரஸ் கவுன்சிலும், மனுதாரர் மற்றும் வழக்கில் தொடர்புள்ள வழக்கறிஞர்களும் தெரிவிக்க வேண்டும். சட்டம் இல்லாமல் கவுன்சில் அமைக்க முடியாது என்பதால் உத்தரவை மறு ஆய்வு செய்ய தயாராக உள்ளோம் என்று தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தனர்….

The post மாநில பிரஸ் கவுன்சில் அமைக்க சட்ட விதிகள் உள்ளதா?: இந்திய பிரஸ் கவுன்சில் பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: