எடப்பாடி பழனிசாமி மீது வெடிகுண்டு வீசுவோம்: மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

புளியங்குடி: சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் போலீஸ் அவசர உதவி எண் 100க்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் பேசிய நபர், செப்டம்பர் 1ம் தேதி விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவன் ஜெயந்தி விழாவையொட்டி தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நெற்கட்டும் செவலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தால் அவர் மீது வெடிகுண்டு வீசுவோம் என்று கூறியுள்ளார். மேலும் புளியங்குடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்கப்போவதாகவும் மிரட்டல் விடுத்து போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த நபரின் செல்போன் சிக்னல், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை காட்டியது. விசாரணையில் அவர், தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே தலைவன்கோட்டை மெயின் ரோட்டைச் சேர்ந்த பூசைபாண்டியன் மகன் வெள்ளத்துரை (32) என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது, கடந்த ஆண்டும் இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக வெள்ளத்துரை மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

The post எடப்பாடி பழனிசாமி மீது வெடிகுண்டு வீசுவோம்: மிரட்டல் விடுத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: