போக்சோவில் கைதாகி ஜாமீனில் வந்த காதலனுடன் சிறுமி தற்கொலை

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, கவுதாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி (22). வீடுகளுக்கு ஜன்னல் அமைக்கும் வேலை செய்து வந்தார். இவரும், பச்சப்பனட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி முதலாண்டு மாணவியான 17 வயது சிறுமியும் காதலித்துள்ளனர். இதற்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, மகளை நரசிம்மமூர்த்தி டார்ச்சர் செய்வதாக, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த மாதம் புகார் அளித்தனர்.போலீசார் விசாரணை நடத்தி, நரசிம்மமூர்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் தங்கி படித்து வந்த மாணவி, நேற்று முன்தினம் ஊருக்கு வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டு, நரசிம்மமூர்த்தியை பார்க்க கவுதாலம் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு நரசிம்மமூர்த்தியின் வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் தனியாக தங்கி உள்ளனர். நேற்று காலை இருவரும் அந்த வீட்டின் அறையில் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

The post போக்சோவில் கைதாகி ஜாமீனில் வந்த காதலனுடன் சிறுமி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: