ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு: புதிய தந்திரி பொறுப்பேற்பு

திருவனந்தபுரம்: சிங்க மாதம் எனப்படும் ஆவணி திங்கள் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (16ம் தேதி) மாலை திறக்கப்படுகிறது. அடுத்த ஓராண்டுக்கான தந்திரியாக கண்டரரு ராஜீவரரு பொறுப்பேற்கிறார். கீழ் சாந்தி தேர்வும் நடக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுகிறார். பக்தர்களுக்கு திருநீறு பிரசாதம் வழங்கப்படும். மற்றபடி இன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜைகளுக்கு தலைமை வகிக்கும் தந்திரி பொறுப்பு தாழமண் குடும்பத்திடம் உள்ளது. இந்த குடும்பத்தில் தற்போது கண்டரரு ராஜீவரரு, மகேஷ் மோகனரரு என 2 தந்திரிகள் உள்ளனர். சுழற்சி முறையில் இவர்கள் தந்திரி பொறுப்பை நிர்வகிக்கின்றனர். 2023 ஆகஸ்ட் முதல் தந்திரி பொறுப்பு வகித்து வந்த மகேஷ் மோகனரரு சுற்று முடிந்த நிலையில், இன்று முதல் தந்திரி பொறுப்பை கண்டரரு ராஜீவரரு ஏற்கிறார். அவருடன் அவரது மகன் பிரம்ம தத்தனும் பூஜைகளில் கலந்து கொள்கிறார்.

நாளை (17ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் கண்டரரு ராஜீவரரு மற்றும் பிரம்ம தத்தன் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து பூஜைகளை தொடங்கி வைப்பர். தொடர்ந்து கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு உஷ பூஜை, மதியம் 12.30 மணிக்கு உச்ச பூஜை, களபாபிஷேகம், மாலை தீபாராதனை, இரவு புஷ்பாபிஷேகம், படி பூஜை, அத்தாழ பூஜை நடக்கிறது. சபரிமலையில் ஐயப்பனுக்கு நிவேத்யங்கள் செய்ய, பூஜைகளில் உதவ நியமிக்கப்படும் கீழ்சாந்தி குலுக்கல் தேர்வும் நாளை (17ம் தேதி) காலை 8 மணிக்கு நடக்கிறது. கோயிலில் எல்லா நாட்களிலும் காலை முதல் மாலை வரை உதயாஸ்தமன பூஜை, இரவு 7 மணிக்கு படிபூஜை நடக்கிறது. பூஜைகள் முடிந்து ஆகஸ்ட் 21ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

The post ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு: புதிய தந்திரி பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: