கடலுக்குச் சென்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள்: 8 நாள் வேலைநிறுத்தம் வாபஸ்

ராமேஸ்வரம்: வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று, ராமேஸ்வரம் மீனவர்கள் 8 நாட்களுக்கு பிறகு நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 31ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது, இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் மீனவர் மலைச்சாமி உயிரிழந்தார். உடன் சென்ற மீனவர்கள் மூக்கையா, முத்து முனியாண்டி மீட்கப்பட்டனர்.‌ மாயமான மீனவர் ராமச்சந்திரனை கண்டுபிடிக்க முடியவில்லை. இலங்கை கடற்படையின் அத்துமீறல் நடவடிக்கைகளை கண்டித்தும், மீனவரின் உடலை மீட்டு தரக்கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 2ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மாயமான மீனவர் ராமச்சந்திரனின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தது. மேலும் மீனவர்கள் பிரச்னையை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து மீனவர்கள் பிரச்னை குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்கு பின் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்வது என நேற்று முன்தினம் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, 8 நாட்களுக்கு பிறகு நேற்று காலையில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. முன்னதாக, மீனவர்கள் மீன்பிடிக்க தேவையான டீசல், ஐஸ் கட்டி போன்ற உபகரணங்களை படகுகளில் ஏற்றி தயார்படுத்தினர். இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல் நடவடிக்கைகளால், குறைவான விசைப்படகுகளே நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டது. அதில் மீனவர்கள் உரிய அடையாள அட்டையுடன் கடலுக்கு செல்ல வேண்டும். மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்பாக இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் ஒலி பெருக்கி மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்தனர்.

The post கடலுக்குச் சென்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள்: 8 நாள் வேலைநிறுத்தம் வாபஸ் appeared first on Dinakaran.

Related Stories: