மீனவர்கள் படகுகளை விடுவிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், இராமேஸ்வரம் அருகே, பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நான்கு படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில், நேற்று இலங்கைக் கடற்படையினர் அந்தப் படகுகளை விரட்டி, மீன்பிடித் தொழில் மேற்கொண்டிருந்த 35 மீனவர்களையும், அவர்களது 4 படகுகளையும் சிறைபிடித்துள்ளனர்.

பின்னர் இவர்களை கற்பிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, இலங்கை மீன்வளத் துறையிடம் இலங்கை கடற்படை ஒப்படைத்துள்ளது. இலங்கை அரசின் இதுபோன்ற தொடர் கொடூர நடவடிக்கை என்பது தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை பறிக்கும் செயலாகும். இது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே பிரதமர் இலங்கை அரசிடம் உடனடியாக பேசி, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கவும், இந்த நீண்டநாள் பிரச்சனைக்கு நியாயமான, நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ள்து.

 

The post மீனவர்கள் படகுகளை விடுவிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: