கூடலூரில் சேற்றில் சிக்கி காட்டு யானை பலி


கூடலூர்: கூடலூரில் சேற்றில் சிக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம்  மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட வடவயல் கிராமத்தில் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு நேற்று சுமார் 13 வயதான ஆண் காட்டு யானை ஒன்று வந்தது. அப்போது, அங்குள்ள சேற்றில் சிக்கி உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானை இறந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். விவசாய நிலத்தில் இருந்த வாழை மரங்களை சாப்பிடுவதற்காக வந்த யானையின் முன்னங் கால்கள் இரண்டும் சேற்றில் ஆழமாக சிக்கியதால் சேற்றில் இருந்து வெளியேற முடியாமல் யானை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

யானை இறந்து கிடந்த பகுதியில் யானையின் தாடையின் கீழ் பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின்வேலி அமைக்கும் கம்பி ஒன்றும் செல்கிறது. எனவே, யானை மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் வனத்துறைக்கு எழுந்துள்ளது. விவசாய நிலத்தின் உரிமையாளரும் அங்கு இல்லை. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ள வனத்துறையினர், யானையின் உடலை உடற்கூறாய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் அறிக்கை வந்த பின்னரே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post கூடலூரில் சேற்றில் சிக்கி காட்டு யானை பலி appeared first on Dinakaran.

Related Stories: